Published : 27 Mar 2020 01:16 PM
Last Updated : 27 Mar 2020 01:16 PM

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29- லிருந்து 35 ஆக அதிகரிப்பு: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 15,788 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். 284 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 962 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 933 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

நேற்றிரவு நிலவரப்படி தமிழகத்தில் 29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளார். 77 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் அரியலூர் என ஆறு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ம்துரை அண்ணா நகரில் வசித்து வந்த 54 வயது நபர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தற்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


அதேப்போன்று ஈரோட்டில் சிகிச்சைப்பெற்றுவரும் தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பிலிருந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கரோனா பாதிப்புடன் இருந்த நபருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும், அரியலூரில் சிகிச்சையில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொற்று எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 2 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறிவிட்டதாலும், ஒருவர் உயிரிழந்ததாலும் எண்ணிக்கை தற்போது 32 ஆக உள்ளது. அரியலூரில் சிகிச்சையில் இருக்கும் இளம்பெண் சமுதாய பரவலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான மூலம் விளக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x