Last Updated : 27 Mar, 2020 12:34 PM

 

Published : 27 Mar 2020 12:34 PM
Last Updated : 27 Mar 2020 12:34 PM

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?- தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் நிகழ்ச்சிக்கு அனுமதி- பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய ஆட்சியர்

தமிழகத்தில் கரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தனி சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மிகத் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக போலீசார் நூற்றுக்கணக்கான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ஆங்காங்கே 144 தடை உத்தரவை மீறியவர்களுக்கு போலீஸார் தண்டனைகளை வழங்கி வருவதும் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவரின் ஏற்பாட்டின்பேரில் ராஜலட்சுமி கல்விக்குழுமம் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முகக்கவசம், சோப்புத் திரவம், சோப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் 9-வது தெருவில் நடைபெற்றது.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் விழிப்புணர்வு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் அனுமதி அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம், சோப்பு திரவம் மற்றும் சோப்பு ஆகியவற்றை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரும்பி வந்த 1084 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதற்காக புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தையை அமைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட உள்ள காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்ககளை வாங்கிச் செல்லலாம்.

பலசரக்கு பொருட்களை ஆர்டரின் பெயரில் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யவும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள் மூலமாக சாப்பாடு பொட்டலங்களை வீட்டுக்கு பார்சல் டெலிவரி செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் முக பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றியும் நின்றுகொண்டிருந்தனர். கொரோனா வைரஸ் பீதியால் தமிழகமே உறைந்த கிடக்கின்ற இந்த வேளையில் அதுபற்றிய சிறுதுளி பயமும் இன்றி பொதுமக்கள் அஜாக்கிரதையாக பொதுவெளியில் கூட்டமாக கூடி நின்றதும், விழிப்புணர்வு என்ற போர்வையில் மாவட்ட ஆட்சியரே அதை ஆதரித்து முகக் கவசங்கள் வழங்கி சென்றதும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பகல் பொழுதில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் நபர்களை கூட நிறுத்தி தடை உத்தரவே மீறியவர்கள் எனும் பெயரில் தண்டனை வழங்கி வரும் போலீஸார் பொதுவெளியில் இவ்வளவு பெரிய கூட்டத்தினருக்கு பாதுகாப்பு வழங்கி நின்றது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x