Published : 27 Mar 2020 07:32 AM
Last Updated : 27 Mar 2020 07:32 AM

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட ஓசூர் மலர் சந்தை; 250 ஹெக்டேரில் மலர்களை பறிக்காமல் விட்ட விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓசூர் மலர்ச்சந்தை மூடப்பட்ட நிலையில், மலர்களை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால், ஓசூர் பகுதியில் 250 ஹெக்டேரில் பல்வேறு வகை மலர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 250 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், பட்டன்ரோஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும், விழாக்களில் அலங்காரத்துக்கு பயன்படும் கொய்மலர்களை பசுமைக்குடில்கள் அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். ஓசூரில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மலர்கள் அனுப்பப்படுவதோடு மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஓசூர் மலர் ஏற்றுமதியாளர்கள் பெங்களூரு வழியாக மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து இல்லாத நிலையில், ஓசூரில் மலர் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. ஓசூர் மலர்ச்சந்தை மூடப்பட்டுள்ளதால் ஓசூர், சூளகிரி, தளி, பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மலர்களை பறித்து விற்பனை செய்ய வழியின்றி தோட்டத்திலேயே பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு ஒரு நாளுக்கு சராசரியாக ரூ.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓசூரில் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி நாகராஜ் கூறியதாவது:

ஓசூர் பகுதியில் சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா, மல்லி, சாமந்தி என 30-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் பயிரிடப்படுகின்றன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடில்களில் தினசரி 70 டன் முதல் 100 டன் வரை மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மலர்ச்சந்தை மூடப்பட்டதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு மலர்களை அனுப்ப முடியவில்லை. மலர் பறிப்பு கூலியாக தினமும் ஒரு நபருக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை செலவாகிறது. மேலும், கோயில் விழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து சுபகாரியங்களும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மலர்களை விற்பனைக்காக பறிக்க முடியாமல் தோட்டத்திலேயே விட்டு விடுவதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மலர் விற்பனை இன்றி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 50 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x