Last Updated : 26 Mar, 2020 07:32 PM

 

Published : 26 Mar 2020 07:32 PM
Last Updated : 26 Mar 2020 07:32 PM

வாரணாசிக்கு ஆன்மிக யாத்திரை: புதுச்சேரியைச் சேர்ந்த 22 பேர் சிக்கித் தவிப்பு; அழைத்து வர முதல்வருக்கு கோரிக்கை

வாரணாசிக்கு ஆன்மிக யாத்திரை சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 22 பேர், அங்கு சிக்கிக்கொண்டு உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று உறவினர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சத்தியா நகரை சேர்ந்த 22 பேர் வாரணாசிக்கு ஆன்மிக யாத்திரையாக கடந்த 19-ம் தேதி புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் புதுக்சேரிக்கு திரும்ப 29-ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்கள் கடந்த 21-ம் தேதி உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அதிகாலை சென்ற நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. மேலும், விமானம், ரயில் உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது. கோயில்களும் மூடப்பட்டன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

இதனால், அவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக அங்குள்ள விடுதியின் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, புதுச்சேரியில் உள்ள தங்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஆன்மிக யாத்திரையாக காசிக்கு வந்தோம். ரயில் சேவை ரத்தானதால், இங்குள்ள அறை ஒன்றில் தங்கியுள்ளோம். எங்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவிக்கின்றோம். எனவே, எங்களை இங்கிருந்து புதுச்சேரிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு புதுச்சேரி முதல்வரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆன்மிக யாத்திரை சென்றவர்களை பாதுகாப்பாக மீட்டு புதுச்சேரி கொண்டு வர முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி கவனத்துக்கும் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து வாரணாசியில் சிக்கித் தவிப்போருக்கு உடனடியாக உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களைப் பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்" என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x