

கரோனா வைரஸ் மருத்துவ சிகிச்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 26) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள், அதாவது வெண்ட்டிலேட்டர் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்கெனவே 1 கோடியே 8 லட்சம் வழங்கிவிட்டார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.