Published : 26 Mar 2020 01:25 PM
Last Updated : 26 Mar 2020 01:25 PM

தமிழகத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 8,136 பேர் கைது: 1,434  வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,136 பேர் கைது செய்யப்பட்டனர். 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் கடைப்பிடிக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசியம் ஏற்பட்டால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேவையான பொருட்கள் வாங்க வெளியே செல்லலாம் அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கண்டபடி வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் நாளான ஊரடங்கு உத்தரவு நாளில் பொதுமக்கள் பல இடங்களில் எச்சரித்து அனுப்பப்பட்டனர், பல இடங்களில் கண்டபடி திரிந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் அடித்து விரட்டப்பட்டனர். பலர் சாலைகளில் தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ஊரடங்குச் சட்டத்தை அலட்சியப்படுத்தி சுற்றிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, ஊரடங்கை மீறி சாலையில் கண்டபடி சுற்றித்திரிந்த 8,136 பேர் கைது செய்யப்பட்டனர். 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரோனா குறித்து பீதியைக் கிளப்பியதாக 12 வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டனர். கரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டுத் தனிமையில் இல்லாமல் சுற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x