Published : 26 Mar 2020 12:34 PM
Last Updated : 26 Mar 2020 12:34 PM

வாகனம் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம்: சென்னை மாநகராட்சி 

சென்னையில் வாகனங்கள் செல்ல முடியாத நுணுக்கமான இடங்கள், குறுகிய இடங்களில் கிருமி நாசினியைத் தெளிக்க ட்ரோன்களைப் (சிறிய ரக விமானம்) பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன் இயந்திரங்கள் இன்று சோதனை செய்யப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன் இயந்திரங்கள் ஆணையர் பிரகாஷ், முன்னிலையில் இன்று (26.03.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் சோதனை செய்யப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது :

“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் 200 வார்டுகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்க பவர் ஸ்பிரேயர் உட்பட 500 நவீன இயந்திரங்கள், அவற்றை இயக்குவதற்கான பணியாளர்கள் அந்தந்த வார்டுகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அரசு அலுவலகங்கள் உட்பட பெரிய கட்டிடங்களில் அதிக சக்தியுடன் கூடிய 75 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு திரும்பிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களின் இல்லங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களால் வழங்கப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

அதேபோன்று, தொடர் வண்டிகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளியூர் செல்ல வேண்டியிருந்த பயணிகள் மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக உள்ள குடிசைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோன் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் இன்று சோதனை செய்யப்பட்டன.

ஒரு ட்ரோன் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50,000 ச.அடி. பரப்பளவிற்கு கிருமி நாசினிகளைத் தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் 4 ட்ரோன் இயந்திரங்கள் உள்ளன” என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x