Published : 26 Mar 2020 07:18 AM
Last Updated : 26 Mar 2020 07:18 AM

21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு

நாடுமுழுவதும் 21 நாள் ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து நீதிமன்ற பணிகளையும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

கரோனா பரவலை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். கூடவே தமிழக அரசும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து நீதிமன்ற பணிகளையும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் விடுத்துள்ள அறிக்கை:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து நீதிமன்ற பணிகளும் மார்ச் 24-ம் தேதியில் இருந்து மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வளாகங்கள் அனைத்தும்மூடப்படும். உயர் நீதிமன்றத்துக்குள் வருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.

அவசர அவசியம் கருதி தாக்கல் செய்யப்படும் அதிமுக்கிய வழக்குகளை தாக்கல்செய்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன்அனுமதி பெற வேண்டும். அதன்பிறகு அந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து நேரடி விசாரணையா அல்லது காணொலி காட்சி மூலமான விசாரணையா என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் இடம் குறித்தும் அறிவிக்கப்படும்.

நிர்வாக அலுவல் மற்றும் நீதிமன்ற பணிகள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும்.

இதேபோல, முன்ஜாமீன் கோரும் வழக்குகளில் போலீஸார் தற்போதுள்ள சூழலில் அரசு வழக்கறிஞர்களை சந்தித்து அறிவுறுத்தல் பெற முடியாது என்பதால், போலீஸார் அந்தந்த எல்லைக்குட்பட்ட மாவட்ட முதன்மை அல்லது அமர்வு நீதிமன்றங்களை அணுகலாம். இதேபோல, முன்ஜாமீன் கோரும்மனுதாரர்கள் அல்லது அவர்களின் வழக்கறிஞர்களும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களை நாடலாம். ஒருவேளை மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டால் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x