Published : 26 Mar 2020 01:31 AM
Last Updated : 26 Mar 2020 01:31 AM

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 26 ஆனது 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. இந்தத் தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரைக் கடந்துள்ள கரோனா பாதிப்பில், இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உயிரிழப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், கை குலுக்கக் கூடாது, கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும், 15 நாட்கள் சமுதாயத் தனிமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் வைக்கப்பட்டது.

3-ம் நிலையான சமுதாயப் பரவல் நிலை இந்தியாவுக்குள் வந்துவிடக்கூடாது என மருத்துவர்கள், அரசாங்கங்கள் போராடுகின்றனர். பிரதமர் நேற்றிரவு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 18 பேரில் 16 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர்.

நேற்று அதிகாலையில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் தமிழகத்தில் முதல் கரோனா உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போது 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழக்க, ஒருவர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததால் எண்ணிக்கை 23 ஆனது. அதில் 4 பேர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள், ஒருவர் அவர்களது கைடு என 5 பேர் ஆவர்.

இந்நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு விஜயபாஸ்கர் புதிதாக ட்விட்டர் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அதில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:

“தற்போதைய தகவல், தமிழ்நாட்டில் மேலும் மூன்று பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த 18 வயது இளைஞர், இவருக்கு துபாயிலிருந்து வந்த மற்றொரு நோயாளியான 63 வயது முதியவரிடமிருந்து பரவியுள்ளது.

இவர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நோயாளியான 63 வயது முதியவர் துபாயிலிருந்து வந்தவர். அவர் வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது நோயாளி தாய்லாந்திலிருந்து வந்தவர் 66 வயதானவர். இவர் ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 பேரும் நலமாக உள்ளனர்”.

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 2 பேர் சிகிச்சை முடிந்து நலமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 23 பேருக்கு தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x