Published : 25 Mar 2020 05:51 PM
Last Updated : 25 Mar 2020 05:51 PM

முகக்கவசம் இலவசமாக தயாரித்து வழங்கும் மதுரை ‘டெய்லர்’: அசாதாரண சூழலிலும் அசராமல் சமூகப்பணி 

உலக நாடுகளில் பரவிவந்த ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் தற்போது இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

5 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவரவும், அந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்கான முகக்கவசம், சானிட்டைசர், சோப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக முகக்கவசங்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகளில் கூட கிடைப்பதில்லை. அதனால், மாநகராட்சிப் பணியாளர்கள், போலீஸார், சுகாதாரத்துறை பணியாளர்கள் முகக்கவசம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது டெய்லரிங் தொழில் பார்க்கும் தொழிலாளர்கள், சுய உதவிக்குழுவினர் பலர் தாமாக முன்வந்து இலவசமாக இநு்த முககவசங்களை தயாரித்து மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

எந்த பிரதிபலனும் இல்லாமல் இந்த அசாதாரண சூழலில் அவர்கள் இலவசமாக முககவசங்கள் தயாரித்து வழங்குவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஒருவர், மதுரை கோச்சடை அருகே நடராஜ் நகரை சேர்ந்த சதீஷ்குமார். இவர் அடிப்படையிலேயே டெய்லரிங் கடை வைத்துள்ளார்.

இவர், அவரது சொந்த தயாரிப்பு துணிகளை கொண்டும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலைகளை கொண்டும் முகக்கவசங்களை தயாரித்து மக்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் இலவசமாக தயாரித்து வழங்கிறார்.

அவர் கூறுகையில், ‘‘டெய்லரிங் தொழிலில் நிறைய துணிகள் மீதமாகவும். அந்தத் துணிகளையும், ரேஷன் கடைகளில் வாங்கி பலர் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வேஷ்டி, சேலைகளை இந்த முகக்கவசம் தயாரிக்க பயன்படுத்துகிறோம். மருந்துக் கடைகளில வாங்கும் முககவசங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், துணியால் நாங்கள் தயாரிக்கும் இந்த முககவசங்களை

துவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம். என்னுடைய கடையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதற்கு துணிகள் தைக்க ஆர்டர் வருவதில்லை. தொழில் நடக்கவிட்டாலும் இந்த இக்கட்டான் நிலையில் அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் தாங்கிப்பிடிக்க வேண்டும். அதனால், என்னால் முடிந்தவரை அவர்களுக்கு வழக்கம்போல் ஊதியத்தை கொடுத்து வருகிறேன். அதனால், அவர்களை இந்த இலவசமாக முகக்கவங்களை தயாரிக்கும் பணியில் பயன்படுத்துகிறேன்.

இந்த முகக்கவசங்கள் தயாரிப்புக்கு அரசு துணிகளை வழங்கினால் இன்னும் அதிகமான முகவகசங்களை இலவசமாக தைத்து வழங்குவேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x