Published : 25 Mar 2020 05:40 PM
Last Updated : 25 Mar 2020 05:40 PM

திண்டுக்கல் உழவர்சந்தையில் கைகழுவிய பிறகே உள்ளே அனுமதி: முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை

திண்டுக்கல்

திண்டுக்கல் உழவர்சந்தைக்கு இன்று காய்கறிகள் வாங்க வந்தவர்கள் கைகழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அல்லது கர்ச்சீப்பால் முகத்தை மூடிச்செல்லாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள உழவர்சந்தை இன்று வழக்கம்போல் செயல்பட்டது. உழவர்சந்தை நுழைவுவாயிலில் சோப்பு நீர் மற்றும் கைகழுவதற்கு நீர் என இரண்டு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

காய்கறிகள் வாங்கச்செல்பவர்கள் கைகழுவிய பிறகு, முகக்கவசம் அல்லது கர்ச்சீப்பால் முகத்தை மூடிச்சென்றால் தான் அனுமதிக்கப்பட்டனர்.

சிலர் முகக்கவசம் இன்றியும், கர்ச்சீப் இன்றியும் வந்தனர். அவர்களை உழவர்சந்தையின் உள்ளே அங்கிருந்து பணியாளர்கள் அனுமதிக்கவில்லை. உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் பணியாளர்கள் நுழைவுவாயிலில் நின்று உள்ளே நுழைபவர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தனர்.

நேற்று மாலையே ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பலரும் நேற்றுமுன்தினமே தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகளை அதிகளவில் வாங்கிச்சென்றதால் இன்று உழவர்சந்தையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தொலைதூர கிராமப்புறங்களில் இருந்து உழவர்சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவரும் விவசாயிகளுக்கு போதிய வாகன வசதியில்லாததால் வரவில்லை.

இதனால் பல கடைகள் காலியாக காணப்பட்டன. இதனால் குறைவான காய்கறிகளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உழவர்சந்தைக்கு வெளியே இருந்த மீன்கடை மற்றும் கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x