ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை; பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பரிசீலனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை; பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பரிசீலனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Updated on
1 min read

கரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரித்தனர்.

இதில், 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இதுவரை கரோனா தொற்று உள்ள ஒரு நோயாளிகூட கண்டறிப்படவில்லை.

ஆனாலும், இதற்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மருத்துவமனை முழுவதும் கட்டுபாட்டில் உள்ளது.

தமிழகம் முழுவதும் கிருமிநாசினிகள் மகளிர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் இந்த விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. இது லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் முதல் கட்டமாக அறிவுறையுடன் அனுப்பப்படுவார்கள். அடுத்தகட்டமாக நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். தமிழகத்தில் இந்த நோயே இல்லாத நிலையை உருவாக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஊரடங்கு அமல்படுத்தி உள்ள நேரத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in