

கரோனா பீதியையும் மீறி மதுரையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் அருகே நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ. கோபிநாத் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கள்ளத்தனமாக மது விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து கள்ளத்தனமாக சந்தையில் விற்பதற்காக வாங்கி விற்பனை செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, கரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்க சமூக விலகல் மட்டுமே ஒரே வழி. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் கரோனாவால் திணறி வரும் நிலையில் இந்தியாவில் சமூகப்பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கைகூப்பி வேண்டுகிறேன் என பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அதையும் மீறி மக்கள் குறிப்பாக குடிமகன்கள் இப்படி அலைமோதுவது பரவலுக்கான ஆபத்தை அதிகப்படுத்துகிறது. மேலும், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இத்தொற்று எளிதில் ஏற்படும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.