Last Updated : 25 Mar, 2020 02:45 PM

 

Published : 25 Mar 2020 02:45 PM
Last Updated : 25 Mar 2020 02:45 PM

தேவையின்றி பைக்கில் சுற்றியவர்களுக்கு அபராதம்: நாளையும் தொடர்ந்தால் வாகனப் பறிமுதல்- மதுரை போலீஸார் நடவடிக்கை

 மதுரை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ள நிலையில், மதுரையில் தேவையின்றி இருச்சக்கர வாகனங்களில் சுற்றிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

வேறு வழியின்றி ஜாலியாக சுற்றியவர்களிடம் போலீஸார் அபராதம் வசூலித்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவில் ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர, பிறவாகனங்கள் மதுரைக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மதுரை நகரில் உள்ளூர் போலீஸ் குழுக்களாக பிரிந்து ஊரடங்கு அமல் பற்றி கண்காணிக்கின்றனர்.

இருப்பினும், மதுரை நகர், புறநகர்ப் பகுதியில் இளைஞர்கள் காலியான ரோட்டில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றுவது அதிகரித்தது தெரிந்தது. போலீஸார் அவர்களை தொடர்ந்து எச்சரித்தனர். ஆனாலும், பெட்ரோல் நிரப்பச் செல்கிறோம், மருத்துவமனைக்குப் போகிறோம் என, உண்மைக்கு புறம்பாக தகவல் சொல்லிவிட்டு செல்வதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அத்தியாவசிய தேவைக்கென செல்பவர்கள் தவிர்த்து, எஞ்சிய நபர்களிடம் போக்குவரத்து விதிமீறலை பொறுத்து, ரூ.100 முதல் 300 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது நகரில் இன்று மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

தமிழகத்திலேயே மதுரையில் தான் கோவிட்-19 பாதிப்பில் முதல் மரணம் நிகழ்ந்து இருக்கிறது. மேலும், சிலர் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 5-ம் தேதி வரை கவனமாக மக்கள் இருக்கவேண்டும் என, எச்சரிக்கப்படுகிறது. குறிப்பாக 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கும் மேலானவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், கரோனா பரவலின் அபாயம் தெரியாமல் ஏதோ விடுமுறை கிடைத்ததாகக் கருதி இளைஞர்கள் பைக்கில் சுற்றுகின்றனர்.

அத்தியாவசியம் என்பதால் பெட்ரோல் நிலையங்ள் திறக்கப்பட்டுள்ளன. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி பெட்ரோல் நிரப்பச் செல்கிறோம் என்ற போர்வையில் 'ஜாலியாக வெளியில் நிறைய இளைஞர்கள் சுற்றினர். அவர்களைத் தடுத்தும் கேட்காத சூழலில் குறிப்பிட்ட தொகை அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினோம்.

இப்படியாவது வெளியில் வருவதைத் தவிர்க்கச் செய்யலாம் என, நம்புகிறோம். ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை வீட்டில் இருக்க வலியுறுத்தவேண்டும். அவர்களை கண்காணிக்கவேண்டும். பெட்ரோல் கிடைப்பதாலேயே இளைஞர்கள் நிறைய பேர் வெளியே வருகின்றனர். மதுரையில் குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க் மட்டும் திறந்து இருக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x