

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்த உத்தரவுகளை சென்னை மாநகராட்சி பிறப்பித்து வருகிறது. அதன்படி டீக்கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, உபேர், ஜோமேட்டோவுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
சென்னையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது சென்னை மாநகராட்சி. சமுதாய விலகலை அனைவரும் கடைப்பிடிக்கும்விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
* டீக்கடைகளில் கும்பலாக நின்று டீ அருந்தும் பழக்கம் உள்ளதால் இன்று மாலை 6 மணியுடன் டீக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
*அடுத்து வரும் 21 நாட்களுக்கு டீக்கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
* சமைத்த உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. ஸ்விக்கி (Swiggy), உபேர் ஈட்ஸ் (Uber eats), ஜோமேட்டோ (Zomato) நிறுவனங்கள் உணவுப் பொருட்களை சப்ளை செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
*பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே வீட்டிற்கு வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.