Published : 25 Mar 2020 01:52 PM
Last Updated : 25 Mar 2020 01:52 PM

21 நாள் ஊரடங்கு; ஆதரவற்றோருக்கு நிதி, உணவு, சமையல் பொருட்கள் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சமுதாயத் தனிமைப்படுத்துதலுக்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக பொதுமக்கள் தாராளமாக முன் வந்து பொருளுதவி, நிதி உதவி அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பெருநகர சென்னை காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து எடுத்து வருகிறது. சென்னையில் சமுதாய தனிமைப்படுத்துதலைத் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் சென்னையில் பணியாற்றிய வெளியூர் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் , தனியாக வசிக்கும் பேச்சிலர்களுக்காக அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்படுகிறது. ஆதரவற்றோர், முதியோர், வீடற்றோருக்காக சென்னையில் 51 காப்பகங்களின் விலாசம் மற்றும் செல்போன் எண்ணுடன் சென்னை மாநகராட்சி அறிவித்தது.

அதில் ஆதரவற்றோர் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பல்வேறு உதவிகளை செய்து பேரிடரைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கூடுதல் மனித உழைப்பும், நிதியும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உதவியை சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வரலாம் என்று கோரிக்கை வைத்துள்ள சென்னை மாநகராட்சி தற்போது பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் சமையல் பொருட்கள், எண்ணெய், பருப்பு வகைகள் என இயன்றதை வழங்கலாம், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு:

''பெருநகர சென்னை மாநகராட்சி மார்ச் 23-ம் தேதி அன்று ஏற்கெனவே வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டின் படி சென்னை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தன்னார்வலர்கள்/ NGO covid 19 , voulenteers registration & NGO's registration என்ற இணைப்பில் உள்ள link-ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தவிர்த்து 24 மணிநேரமும் இயங்கும் 044- 25384530 என்ற தொலைபேசி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தன்னார்வத் தொண்டு அமைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யவும் அல்லது பதிவு செய்து தொடர்பான சந்தேகங்களை தெரிவுபடுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்திற்குள் ஏப்ரல் 14-ம் தேதி வரை நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சோசியல் டிஸ்டன்ஸ்-க்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தன்னார்வ தொண்டு அமைப்புகள் கீழ்க்கண்ட பொருட்களை வழங்க முன்வரலாம்.

1. அரிசி, பருப்பு, சமையல், எண்ணெய், சானிடரி நாப்கின், சாம்பார், ரசம் பொடி போன்ற அத்தியாவசிய திடப் பொருட்கள்.

2. முகக் கவசங்கள் (வீடில்லாத மக்களுக்காக)

3. கிருமிநாசினி

4. கைகளைச் சுத்தம் செய்யும் சோப்பு திரவம் போன்ற கிருமி நாசினி.

மேற்கண்ட பொருட்களை கீழ்க்காணும் இடங்களில் ஒப்படைக்கலாம்.

1. ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம்.
எண் 82/1 , விளையாட்டுத் திடல் தெரு,
கீழ்ப்பாக்கம் சென்னை 10.

2. அம்மா அரங்கம்,
11-வது தெரு,குமரன் நகர் ஏ பிளாக்,
அண்ணா நகர் கிழக்கு, சென்னை 30.

மேலும், நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் கணக்கு குறியீட்டு எண்ணில் அல்லது காசோலை மூலம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்க்காணும் வங்கி அக்கவுண்ட் எண்ணில் செலுத்தவேண்டும்.

அல்லது மேற்காணும் பெயரில் காசோலை வழங்கலாம்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x