Published : 25 Mar 2020 12:15 PM
Last Updated : 25 Mar 2020 12:15 PM

கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அதிகாரி; நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்: காவல் அதிகாரியின் காலில் விழுந்த இளைஞர்

சென்னையில் எச்சரிக்கையை மீறி வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளைக் கையெடுத்துக் கும்பிட்டு போக்குவரத்து காவல் அதிகாரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் . அவரது வேண்டுகோளால் கலங்கிய வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார். நெகிழ்ச்சியான் இந்த நிகழ்வு அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்தது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். பிரதமர் தன் பேச்சில், ''உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். 21 நாட்கள் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக காவல்துறை, அந்தந்தப் பகுதி ஆட்சியர்கள் இணைந்து பிரதமர் உத்தரவை நிறைவேற்ற 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அரசின் உத்தரவை மீறுவோர் மீது பேரிடர் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் ஊரடங்கின் மகத்துவத்தை உணராமல், தனிமைப்படுத்துதல் குறித்த அவசியத்தை உணராமல் கூடும் நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது. பல இடங்களில் போலீஸார் வாகன ஓட்டிகளை நயந்தும், கண்டிப்புடன் கூறியும், அறிவுரை சொல்லியும் அனுப்பி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில் பணியாற்றும் ரஷீத் என்கிற போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன் ஓட்டிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

வெளியே யாரும் நடமாடாதீர்கள். உங்களைக் கையெடுத்து கும்பிடுகிறேன். தயவுசெய்து வீட்டில் இருங்கள். நீங்கள் அனைவரும் தெய்வம் போன்றவர்கள். ப்ளீஸ் எனக்காக, உங்களுக்காக, நமக்காக வராதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியடைந்தனர். ஒரு இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீதின் காலில் விழுந்தார். பின்னர் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். ரஷீத் தனது பணியைத் தொடர்ந்தார்.

அவர் அதன் பின்னரும் வருகிற அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோளை வைத்தவண்ணம் இருந்தார்.

மற்ற மாநிலங்களில் போலீஸார் தடியால் முரட்டுத்தனமாக அடித்து விரட்டும்போது சென்னை மற்றும் மற்ற மாவட்ட போலீஸரின் அறிவுபூர்வமான அணுகுமுறை பொதுமக்களை சிந்திக்க வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x