கரோனா தடுப்புப் பணி: முதல் கட்டமாக எம்.பி. நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க ஒப்புதல்; அன்புமணி அறிவிப்பு

அன்புமணி: கோப்புப்படம்
அன்புமணி: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தடுப்புப் பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதஸ் இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.

இதற்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும், கரோனா வைரஸின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களைத் தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயைச் சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.

காரோனா வைரஸால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர்கள், நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கவசக் கருவிகள், கரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்குப் பெருந்தொகை தேவைப்படுகிறது.

தமிழக அரசின் நோய்த்தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்கத் தயாராக உள்ளேன்" என அன்புமணி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in