Published : 25 Mar 2020 08:46 AM
Last Updated : 25 Mar 2020 08:46 AM

அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காத மக்கள்; புதுச்சேரி நகரெங்கும் வாக்குவாதம் - போலீஸார் தவிப்பு: இன்று முதல் தீவிரம் காட்ட முடிவு

கரோனா பரவலை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் 28-ம் தேதி வரை மருந்தகங்கள் நீங்கலாக அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. இதனால் நேற்று மாலை மக்கள் காய்கறி கடைகளில் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

புதுச்சேரி

கரோனா தடுப்புக்காக போடப்பட்ட அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் அவர்களை திருப்பி அனுப்புவதில் போலீஸார் தவித்தனர். இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி சுற்றுலா பகுதியாக இருப்பதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.

கரோனாவால் தாக்கப்பட்டவர்களும் புதுச்சேரிக்கு வந்து, சென்றிருக்கலாம் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்திருந்தால், அவர்களுக்கு சேவை செய்த ஓட்டல் ஊழியர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்த 515 ஊழியர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து, அவர்களைக் கண்காணித்து வருகின்றது.

மேலும் யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு 9 முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், அந்த உத்தரவை புதுச்சேரி மக்களில் பெரும்பாலானோர் மதிக்கவில்லை.

நேற்று முன்தினம் கடைகள் அடைக்கப்பட்டி ருந்தாலும், நிறுவனங்களுக்கு விடுப்பு விடப்பட்டிருந்தாலும் மக்கள் அனைவரும் வழக்கம்போல் தெருக்களில் நடமாடி வந்தனர். நகரப் பகுதிகளில் கடைகள் மூடியிருந்தாலும் தேவையில்லாமல் பலரும் இருசக்கர வாகனத்தில் நகரைச் சுற்றி வந்தனர். அதை தடுத்த போலீஸாரிடமும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரிக்கு வரும் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அதன் வழியாக வந்த எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. புதுச்சேரிக்குள் வர விடாமல் தடுத்ததால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது.

'கரோனாவின் பாதிப்பை உணராமல் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் இருப்பது ஆபத்துக்குரியதே!' என்று போலீஸார் தெரிவித்தனர். எல்லைப்பகுதியில் தமிழகப் போலீஸாரும் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சேரி போலீஸாருடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளனர்.

இன்று முதல் தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடையும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நகர் பகுதியிலும் வீடுகளை விட்டு வெளியே வந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x