144 தடையால் பேருந்துகள் நிறுத்தம்; வேலைக்கு சென்ற மக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி: கூடுதலாக பேருந்துகளை இயக்கியது அரசு போக்குவரத்துக் கழகம்

144 தடை உத்தரவு காரணமாக நேற்று மாலை நாமக்கல்லில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், வெளியூர் சென்று திரும்பிய மக்கள் பேருந்துகள் கிடைக்காததால் நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தல் திரண்டிருந்தனர்.  அடுத்தபடம்: சொந்த ஊருக்குச் செல்வதற்கு, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
144 தடை உத்தரவு காரணமாக நேற்று மாலை நாமக்கல்லில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், வெளியூர் சென்று திரும்பிய மக்கள் பேருந்துகள் கிடைக்காததால் நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தல் திரண்டிருந்தனர். அடுத்தபடம்: சொந்த ஊருக்குச் செல்வதற்கு, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
Updated on
1 min read

144 தடை உத்தரவு காரணமாக நேற்று மாலை அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்காக சென்ற நபர்கள் வீடு திரும்புவதற்கு பேருந்து வசதியில்லாமல் அவதிப்பட்டனர்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து அரசு, தனியார் பேருந்துகள், வாடகை கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை வேலைக்கு சென்ற நபர்கள் மாலை தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது பேருந்துகள் இல்லாததால் அவதிப்பட்டனர். நாமக்கல் பேருந்து நிலையத்தில், ஓரிரு நகரப் பேருந்துகள் மட்டுமே இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. பலர் நடந்து செல்லத் தொடங்கினர். சிலர் தங்களது உறவினர் உள்ளிட்டோரை வர வழைத்து வாகனங்களில் சென்றனர். தடை உத்தரவு காரணமாக மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம்

சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடைசி நேரத்தில் சேலம் வந்த பலர், பேருந்துகள் கிடைக்காமல் தவித்தனர். இதையடுத்து, சேலம் போக்குவரத்துக் கழகம் கூடுதல் நேரம் பேருந்துகளை இயக்கி, நிலைமையை சமாளித்தது.

சேலம் வழியாக சொந்த ஊருக்குச் செல்பவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். எனவே, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலை கூட்டம் குறைந்து, குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் கூட்டம் இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்கினார்.

இதனிடையே, ஊரடங்கை ஒட்டி, வெளியூர் சென்ற பேருந்துகள் மாலை 6 மணிக்குள் சேலம் திரும்பும் வகையில் திட்டமிட்டு இயக்கப்பட்டது. ஆனால், பயணிகள் 5 மணி வரை குவிந்ததால், வெளியூர் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல், தவித்தனர். எனவே, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாலை 7 மணி வரையிலும் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in