Published : 25 Mar 2020 07:21 AM
Last Updated : 25 Mar 2020 07:21 AM

144 தடை உத்தரவை தொடர்ந்து சென்னையில் இருந்து 2.20 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்: கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டது

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க பேருந்துகள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் பேருந்துகள், மக்கள் கூட்டம் இன்றி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னையில் இருந்து 2 லட்சத்து 20ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லஅரசு போக்குவரத்துக் கழகங்கள்சார்பில் 2,450, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 400 என மொத்தம் 2,850 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் நேற்று அதிகாலை வரை ஒருலட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம்செய்துள்ளனர். மேலும் தாம்பரத்தில் இருந்து 430 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 29 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக தேவையானஅளவு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என்று கூறப்பட்டிருந்தது .

போக்குவரத்து கழகத்தின் அரசுமுதன்மைச் செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்தனர்.

நேற்று மாலை 6 மணி முதலே 144 தடை உத்தரவு தொடங்கியதால், கோயம்பேட்டில் இருந்து நீண்ட தூரத்துக்கு செல்லும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. அதிகபட்சமாக திருச்சி வரை செல்லும் பேருந்துகளே இயக்கப்பட்டன. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று காலையில் கோயம்பேட்டில் இருந்து 5 மணி நேர பயண தூரத்துக்கான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையம் பிற்பகல் 2.30மணிக்கு மூடப்பட்டது. பேருந்து நிலையத்தை மூடிவிட்டதாகவும், பேருந்துகள் இயக்கம் வரும்31-ம் தேதி வரை நிறுத்தப்பட்டதாகவும் அங்கு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியிருந்த பகுதிகள் நேற்று பிற்பகலுக்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x