இந்தோனேசியாவிலிருந்து வந்த 8 பேருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை: கரோனா வார்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை

இந்தோனேசியாவிலிருந்து வந்த 8 பேருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை: கரோனா வார்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை
Updated on
1 min read

இந்தோனேசியாவிலிருந்து ராமநாதபுரம் வந்த 4 தம்பதிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான 4 தம்பதிகள் தொழுகை முறையை இந்தியாவில் போதிப்பதற்காக கடந்த பிப்.26-ல் டெல்லி வந்துள்ளனர்.

பின்னர் டெல்லி தப்லிக் ஜமாத் மூலமாக மார்ச் 6-ல் மதுரைக்கு வந்து அங்குள்ள பள்ளிவாசல்களில் போதித்துள்ளனர். பின்னர் மார்ச் 8 முதல் 23-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல், ஏர்வாடி, வல்லக்குளம், ஒப்பிலான், கீழச்செல்வனூர், தேரிருவேலி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை முறையை போதித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் பாரதிநகர் பள்ளிவாசலுக்கு வந்த அவர்களை கேணிக்கரை போலீஸார் விசாரணை செய்து, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் கரோனா சிறப்பு வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், வழுதூரில் உள்ள மசூதி கட்டிடப் பணிக்கு வந்த கேரளாவைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை மாவட்ட சுகாதாரப் பிரிவினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களை எங்கும் செல்லக்கூடாது என தங்கியிருக்கும் இடத்தில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் கேட்டபோது, இந்தோனேசியாவிலிருந்து வந்த 8 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆனால்,அவர்களை 28 நாள்கள் தனிமைப்படுத்துதல் எனும் அடிப்படையில் அரசு தலைமை மருத்துமனை சிறப்புப் பிரிவில் தங்க வைத்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in