Published : 24 Mar 2020 02:47 PM
Last Updated : 24 Mar 2020 02:47 PM

மாலை 6 மணிக்கு 144 உத்தரவு: பிற்பகல் 2.30 மணியுடன் கோயம்பேடு பேருந்து சேவைகள் நிறுத்தம் 

மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளதால் வெளியூர் செல்லும் பேருந்துகள் பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலால் 3,81,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதன் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனிமைப்படுத்துதலில் காட்டப்படும் அலட்சியம்.

தமிழகத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் பாதிப்பு தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு நேற்று வேகவேகமாக பல முடிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வரும். இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் அடித்துப் பிடித்து வாகனங்களில் சொந்த ஊருக்குக் கிளம்பினர். இது நகரங்களிலிருக்கும் கரோனாவை கிராமத்துக்குக் கொண்டு செல்லும் செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.

கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம் இன்று காலையில் குறைந்தது. காரணம் வெளியூர் பயணம் செல்லும் பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் 5 மணி நேரப் பயண தூரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பேருந்து போக்குவரத்து இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது. யாரும் பேருந்துக்காக கோயம்பேடு வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x