Last Updated : 24 Mar, 2020 02:13 PM

 

Published : 24 Mar 2020 02:13 PM
Last Updated : 24 Mar 2020 02:13 PM

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் சுங்கக் கட்டண வசூலை ஒரு நாள் நிறுத்தலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் ராஜகோபால், இன்று ஒரு நாள் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இந்த வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சுங்கக் கட்டண மையங்களில் ஒவ்வொரு வாகனங்களும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி வரை நிறுத்தப்படுவதால் கரோனா பரவ வாய்ப்புள்ளது.

எனவே இன்று ஒரு நாள் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது முதல் ஒரு லட்சத்தை எட்ட 30 நாட்கள் எடுத்துக்கொண்ட கரோனா வைரஸ் அடுத்த லட்சத்தை எட்ட 14 நாட்களை எடுத்துக்கொண்டது, மூன்றாவது லட்சத்தை அடைய 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது.

இந்தியாவில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகினர். இந்நிலையில் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

எனவே, சுங்கச்சாவடிகளின் மூலம் கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x