

ஸ்வீடன் நாட்டில் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வில்லிபுத்தூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் டிசைனர் உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (38), கம்ப்யூட்டர் டிசைனர். இவர் தனது மனைவி, மகன் ஆகியோருடன் பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடன் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவியும் மகனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜேஷ்குமாரின் தந்தை, உயிரிழந்த தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்வீடனில் சிகிச்சை பெற்று வரும் மருமகள், பேரனுக்கு உரிய சிகிச்சை அளிக்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் நேற்று மனு அளித்தார்.