Published : 24 Mar 2020 09:04 AM
Last Updated : 24 Mar 2020 09:04 AM

கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆங்கிலேயர் காலத்து தொற்றுநோய்கள் சட்டம்தான் இப்போதைக்கு மருந்து- உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆங்கிலேயர் காலத்து தொற்றுநோய்கள் சட்டம்-1897 தான் இப்போதைக்கு தேவைப்படும் மருந்து என சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தொற்று நோய்கள் சட்டம் - 1897 ஷரத்து 2-ன் பிரகாரம் தமிழகத்தின் அனைத்து எல்லைகளையும் மூடதமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 பிரகாரம் தடை உத்தரவு இன்று(மார்ச் 24) மாலை 6 மணி முதல்தொடங்கி வரும் மார்ச் 31 வரைஅமலில் இருக்கும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தொற்றுநோய்கள் சட்டம் (THE EPIDEMIC DISEASES ACT, 1897) என்ன சொல்கிறது என்பது குறித்து உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்களின் கருத்து:

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா: 1890-ம் ஆண்டு தற்போதுள்ள மும்பையில் பிளேக் நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்போதிருந்து பிரிட்டிஷ் அரசு தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி தொற்றுநோய்கள் சட்டம் –1897-ஐ கொண்டு வந்தது. இந்தசட்டத்தின் நோக்கமே தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சரியான சிகிச்சை அளித்து குணப்படுத்துவது தான்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியதோடு மட்டுமின்றி அவர்களின்வீடுகள் மற்றும் உடைமைகளையும் அழித்தது. ஆனால் அதன்பிறகு இந்தியா சுதந்திரமடைந்தபிறகு இந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி காலரா, டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து மக்களைக்காக்கும் விதமாக இந்த சட்டம் அவ்வப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொற்றுநோய்கள் சட்டம் -1897 நான்கு பகுதிகளைக் கொண்டிருந்தாலும், இந்த சட்டத்தின் பிரகாரம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொற்றுநோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாநிலஅரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தேவைக்கேற்ப மேற்கொள்ளலாம் என்பது இதன் திருத்தங்களில் முக்கியமான ஒன்று. இதன்படி ஒரு மாநிலத்தில் தொற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது. மாநில எல்லைகளை மூடுவது. போக்குவரத்தை தடைசெய்வது. நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவது.

நோய் பரவலுக்கு காரணமான காரணிகளை கண்டறிந்து தடுப்பது.தேவையான மருந்து உபகரணங்களை கையில் வைத்திருப்பது என நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள இந்த சட்டம் பேருதவி புரியும். தொற்றுநோய்கள் தடுப்புச்சட்டம் என்பது அவசர காலகட்டங்களில் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு அளிக்கும் சட்டமாகவே இருந்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கான விரிவுரைகள் கிடையாது.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. கொள்ளை நோய் என்பார்கள். அதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் மக்களை காக்கவேஇந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை அடக்கி ஆள இதுபோன்றசட்டங்களை தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர். இருந்தபோதும் சுதந்திரமடைந்தபிறகு இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதற்கு முன்பாக காலரா தடுப்புக்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த2009-ல் புனேவில் பன்றிக்காய்ச் சலை தடுக்கவும், 2015-ல் சண்டிகரில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், 2018-ல் குஜராத்தில் காலராவை கட்டுப்படுத்தவும் இந்த தொற்றுநோய்கள் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 144 தடை உத்தரவு என்பது வேறு, ஊரடங்கு உத்தரவு என்பதுவேறு. ஊரடங்கு என்பது யாருமேவெளியே நடமாட முடியாது. ஆனால் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 பிரகாரம் தடைஉத்தரவு என்பது 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்று கூடக் கூடாது. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாடக் கூடாது. தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக இந்தசட்டங்களை முதல்வர் பிறப்பித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x