Published : 23 Mar 2020 08:12 AM
Last Updated : 23 Mar 2020 08:12 AM

மகள் உயிரிழப்பை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை: சடலங்களுடன் 3 நாட்களுக்கு பிறகு சிறுவனும் தற்கொலை

மகள் உயிரிழந்ததை தாங்க இயலாமல் தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது சிறுவனும் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர் - காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (71). இவரது மகள் அபர்ணா (46). அபர்ணாவின் மகன் ஜிதின் (17). சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் விஜிவி கார்டன் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்தவர்கள், பிறகு குடும்பச் சூழல் காரணமாக வீட்டை விற்றுவிட்டு, மேற்கூறப்பட்ட முகவரியில் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

முன்னதாக, கணவர் இறந்துவிட்ட நிலையில் தாய், தந்தை மற்றும் மகனுடன் அபர்ணா வசித்து வந்தார். பட்டதாரியான அபர்ணா, திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியை பணியிலிருந்து விடுபட்டவர், அதற்கு பிறகு சரியான வேலை அமையாமல் வேலை தேடி வந்துள்ளார். வீட்டிலும் வறுமையான சூழல் நிலவியுள்ளது. இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் அபர்ணாவின் தாயார் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கையும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அபர்ணா செய்து முடித்துள்ளார். தாயார் இறப்புக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த அவருக்கு, உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் மகனுடன் பேசிக் கொண்டிருந்த அபர்ணா, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை வெள்ளிங்கிரி, மகள் இறந்தபிறகு வாழ விருப்பமில்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இருவரது உயிரிழப்பால் செய்வதறியாது திகைத்த சிறுவன் ஜிதின், தானும் தற்கொலை செய்துகொள்ள பல வழிகளில் முயன்றுள்ளார். முடியாமல் போகவே, தாய் மற்றும் தாத்தாவின் உடல்களுடன் சில தினங்கள் வசித்த அவர், நேற்று முன்தினம் மாலை தாத்தாவின் அலைபேசியிலிருந்து, கோவை பன்னிமடையில் வசிக்கும் மாமாவை அழைத்து பேசி, 3 நாட்களுக்கு முன் தாய், தாத்தா உயிரிழந்துவிட்டதாகவும், பிற விவரங்களையும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், திருப்பூர் பெரியார் காலனியிலுள்ள மற்றொரு உறவினரை அழைத்து நேரில் செல்லுமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றபோது, வீட்டு கதவின் வெளியில் துர்நாற்றம் வீசியுள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அபர்ணா, வெள்ளிங்கிரி உடல்கள் துர்நாற்றம் வீசிய நிலையிலும், தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜிதினின் உடலும் இருந்துள்ளன.

சம்பவ இடத்துக்கு ஊரக காவல் நிலைய போலீஸார் சென்று, உடல்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'வீட்டில் வறுமை நிலவி வந்ததாக தெரிகிறது. இதனால், அபர்ணா உட்பட யாரும் அருகில் வசிப்போருடன் சரிவர பேசுவதில்லை. ஜிதினும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சொத்து பிரச்சினையால் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, பேசுவது என அனைத்தையும் தவிர்த்து வந்ததால், உறவினர்களுடனான தொடர்பும் சரிவர இல்லாமல் இருந்துள்ளனர்.

இறப்பதற்கு முன், ஜிதின் தனது தாய், தாத்தா மற்றும் தனது படங்களை வைத்து ரொட்டிகள் மற்றும் நெய் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இறுதியாக அலைபேசி மூலமாக ஜிதின் பேசிய குரல் பதிவு சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x