Published : 22 Mar 2020 09:15 PM
Last Updated : 22 Mar 2020 09:15 PM

வேம்பார் கடற்கரைக்கு வந்த கொச்சி மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வேம்பார் கடற்கரைக்கு விசைப்படகில் வந்த கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஆபிரகாம் மகன் ஜோஸ் ஆபிரகாம். மீனவரான இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜோஸ் ஆபிரகாம் உள்ளிட்ட 14 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குப் புறப்பட்டனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, விசைப்படகில் இருந்த ஜெனரேட்டர் திடீரென பழுதானது.

அதனை பழுது நீக்குவதற்காக அருகே உள்ள கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்த ஜோஸ் ஆபிரகாம் உள்ளிட்ட மீனவர்கள் வேம்பார் கடற்கரைக்கு விசைப்படகில் வந்தனர்.

மதியம் 2 மணி அளவில் புதிதாக ஒரு விசைப்படகு கடற்கரைக்கு வருவதைப் பார்த்த வேம்பார் மரைன் போலீஸார் உடனடியாக கடற்கரைக்கு வந்து அந்த படகில் இருந்து கீழே இறங்கி வரக்கூடாது எனக் கூறினர்.

மேலும் வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வேம்பாரை சேர்ந்த மீனவர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உலகு கனி மற்றும் மருத்துவ குழுவினர் கடற்கரைக்கு வந்து கொச்சியை சேர்ந்த விசைப்படகில் இருந்த 14 மீனவர்களின் உடல் நிலையை பரிசோதித்தனர்.

யாருக்கும் காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அந்த மீனவர்கள் ஜெனரேட்டரை பழுது நீக்கிவிட்டு மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x