ஊரடங்கு நாளில் திருமணம்: உறவினர்கள், நண்பர்கள் வராததால் களையிழந்த மண்டபம்

ஊரடங்கு நாளில் திருமணம்: உறவினர்கள், நண்பர்கள் வராததால் களையிழந்த மண்டபம்
Updated on
1 min read

மக்கள் ஊரடங்கு தினமான இன்று தேனி பழனிசெட்டிபட்டியில் உறவினர்கள், நண்பர்கள் வருகையின்றி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களாகவே கேரள எல்லைக்குச் செல்லும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாய் குறைக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட பெரிய வணிகக் கடைகள் மற்றும் தமிழக எல்லையும் மூடப்பட்டது.

நாடு முழுவதும் இன்று சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் வெறிச்சோடியது. இந்நிலையில் நேற்று தேனி பழனிச்செட்டிபட்டியில் உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மாப்பிள்ளை பெங்களூரூ மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரூவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இரு குடும்பங்களில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் இன்று இத்திருமணம் நடைபெற்றது.

ஊரடங்கு என்பதால் எதிர்பார்த்த உறவினர்கள் பலரும் வரவில்லை. இதனால் குறைவான எண்ணிக்கையில் வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது.

இது குறித்து மாப்பிள்ளை வீட்டார் கூறுகையில், ஒரே பையன் என்பதால் திருமணத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஊரடங்கு என்பதால் பலரும் வரவி்ல்லை. காதல் திருமணம் என்பதால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இத்திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். திருமணம் முடிந்ததும் மண்டபத்தை காலி செய்து விட்டோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in