

கரோனா சுய ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட ஆதரவற்றோர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் இலவசமாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று பொதுமக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்தனர். இதனால் உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள், ஆதரவற்றவர்கள் உணவில்லாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆதரவற்றோர்களை காப்பகங்களில் தங்க வைத்து உணவு, உடை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டஆட்சியர் வினய் உத்தரவின் பேரில், மதுரையில் செஞ்சிலுவை சங்கம், என்.ஆர்.டி. வைகை கிளப் மற்றும் ஹேப்பி சண்டே அமைப்பு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஆதரவற்றோர்கள், சாலையோரங்களில் தங்கியிருப்பவர்களுக்கு இன்று உணவு, குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.
இதில் மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்க பொதுச்செயலர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார், என்.டி.ஆர். வைகை கிளப் நிர்வாகிகள் கார்த்திக், முத்துபாலகவுதம், ஹேப்பி சண்டே அமைப்பு நிர்வாகிகள் பீமராஜ், பிரியதர்ஷினி, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், லெஜிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.