Published : 22 Mar 2020 10:47 AM
Last Updated : 22 Mar 2020 10:47 AM

சாலைகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பரவும் அபாயம்: மீட்டுப் பராமரிக்க களம் இறங்கிய மதுரை தன்னார்வலர்கள்

‘கரோனா’வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் வெளியே வராமல் இருக்க இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் சாலைகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகளுக்கு இந்த வைரஸ் பரவும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மதுரையில் தன்னார்வக் குழுவினர், ஆதரவற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திய ‘கரோனா’ வைரஸ் தற்போது, இந்தியாவை மையம் கொண்டுள்ளது. அதனால், பிரதமர் மோடி, இன்று ஞாயிற்றுக்கிழமை ‘கரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மக்கள், அனைவரும் இன்று ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வராமல் பொது வெளித் தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இன்று நடக்கும் சுய ஊரடங்கு உத்தரவு ஒரு பரிசோதனை முயற்சி என்றும், அடுத்தடுத்து நாட்களில் சீனா, இத்தாலியைப் போல் ‘கரோனோ’ வைரஸ் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் பட்சத்தில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

ஆனால், யாரும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநோயாளிகள், ஆதரவற்றர்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. இவர்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உணவிற்காகவும், தூங்குவதற்காகவும், தினமும் மக்கள் அதிகம் நடமாடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மண்டபங்கள், கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வார்கள். இவர்கள் இன்று வழக்கம்போல் வெளியே நடமாடினால் இவர்களுக்கும் ‘கரோனா’ வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் மூலம் பொதுமக்குளுக்கு அதிகளவு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. அதனால், மதுரையில் தன்னார்வலர்கள், சுய முயற்சியாக நேற்று முதல் சாலைகளில் சுற்றித் திரியும் முதியவர்கள், மனநோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இவர்களைத் தங்க வைத்து பராமரிக்க ஆதரவற்ற இல்லங்கள் இல்லாமல் தடுமாறுகின்றனர். மதுரை இதயம் அறக்கட்டளை இயக்குனர் ஜி.ஆர்.சிவக்குமார் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் சாலைகளில் சுமார் 3 கோடிக்கு மேற்பட்ட ஆதரவற்றவர்கள் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். அரசு இருப்பிடங்களில் வசிக்கும் மக்களை மட்டும் பற்றி கவலைப்படுகிறது. ஆனால், ஆதரவற்ற இவர்களைப் பற்றி சிந்திக்கவில்லை. இவர்களை வெளியே நடமாடவிட்டால் இவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது. பொதுவாகவே சுகாதாரமில்லாமல் அனைத்து இடங்களிலும் செல்லக்கூடிய இவர்களாலே பெரும்பாலான நோய்கள் சமூகத்தில் பரவுகிறது. இந்த விஷயம் தெரிந்தும் இவர்களை மீட்டுப் பராமரிக்க அரசு துறைகள் அக்கறை காட்டுவதில்லை.

சமூகத்தில் பாதி நோய்களைக் குறைத்துவிடலாம். ஆனால், இவர்களை மீட்டு பராமரிக்க ஆதரவற்ற இல்லங்கள் போதியளவில் இல்லை. மாநகராட்சி சார்பில் பெயரளவுக்கு சில வீடற்ற ஏழைகள் இல்லங்கள் உள்ளன. அதில், மனநலம் பாதித்த, அழுக்குடன் காணப்படும் ஆதரவற்ற இவர்களைச் சேர்க்க முடிவதில்லை. ஆனாலும், தற்போது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகங்கள், இவர்களை மீட்டு தங்க வைக்க உதவுவதாக சொல்லி உள்ளார்கள். ஆனாலும் அனைவரையும் மீட்டு சேர்க்க பராமரிப்பு இல்லங்கள் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இதுவரை நாங்கள் மட்டும் 1600 பேருக்கு மேல் மீட்டுள்ளோம். சில சமயங்களில் சாலைகளில் சுற்றித் திரிவோர் உணவு, சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிடுவார்கள். நோய்வாய்ப்பட்டு முடியாமல் சுற்றித் திரிகிறார்கள். அதனால், இவர்களை தமிழகத்தில் மட்டுமில்லாது நாடு முழுவதும் மீட்டு பராமரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x