

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் தோண்டத் தோண்ட முதுமக்கள் தாழி கிடைத்து வருகிறது. மேலும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் ஏற்கெனவே நடந்த 5 கட்ட அகழாய்வுகள் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்தது. தற்போது திருப்புவனம் அருகே கீழடியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து அருகிலேயே மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு 3 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஒரு குழியில் 2 முதுமக்கள் தாழிகள், அடுத்த குழியில் 8 முதுமக்கள்தாழிகள், மூன்றாவது குழியில் 6 முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மணிகள், முதுமக்கள் தாழி மூடிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் கொந்தகையில் 8 முதுமக்கள் தாழி இருந்த குழியில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது வலது, இடது கைகளின் எலும்புகள் மட்டும் தெரிகின்றன. அதற்கு மேற்புறம் 2 சிறிய பானைகள் உள்ளன. அதை முழுமையாக தோண்டிய பிறகுதான் இறந்தவர்களை அமர்ந்த நிலையில் புதைத்தார்களா? அல்லது படுக்கைவசமாகப் புதைத்தார்களா? என்பது தெரியவரும்.
மேலும், இறந்தவர்கள் உண்பதற்காக பானைகளில் உணவுப் பொருட்கள் வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதற்காகத்தான் 2 பானைகள் வைத்துள்ளனர். எலும்புக்கூடு கிடைத்த நிலையில் அப்பகுதியை தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். விரைவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் எலும்புக் கூடுகள் மரபணு ஆய்வு செய்யப்பட உள்ளது.