Published : 22 Mar 2020 09:17 AM
Last Updated : 22 Mar 2020 09:17 AM
முரசொலி அலுவலகம் நில விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம்என்றும், அதற்கான மூலப் பத்திரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
நேரில் ஆஜராக சம்மன்
இதையடுத்து, இதுதொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகக் கூறி ராமதாஸ் மீது, முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணைக்கு ராமதாஸ் நேரில்ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு அளித்ததோடு, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதித்தார். மேலும், இதுதொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT