Published : 22 Mar 2020 08:45 AM
Last Updated : 22 Mar 2020 08:45 AM

குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தொடக்கம்: நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் நோய் தொற்றை தடுக்க நடவடிக்கை

மக்கள் அதிக நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதால் தமிழகத்தில் 305 திட்டப் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கரோனா வைரஸ் தடுப்பு கிருமிநாசினி தெளிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.

கரோனா வைரஸ் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதை உலகளாவிய நோய்த் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பு பணி மேற்கொள்ள அரசு திட்டமிட்டிருந்தது. அதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ஆகியோர் பங்கேற்று, அந்த குடியிருப்பு கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை தொடங்கிவைத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களிடம், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கி விளக்கினர். பொதுமக்களுக்கு கை கழுவும் முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கினர்.

குறிப்பாக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மீது கவனம் செலுத்துவது குறித்து வாரிய மேலாண் இயக்குநர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வேகமாக பரவ வாய்ப்பு

தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தின் திட்டப்பகுதிகள் 305 இடங்களில் உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 757 வீடுகள் உள்ளன. சென்னையில் மட்டும் 207 திட்டப் பகுதிகளும், அவற்றில் 1 லட்சத்து 17 ஆயிரம் வீடுகளும் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதி. மக்கள்தொகையும் அதிகம். இங்கு ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அது பலருக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, விழிப்புணர்வு மற்றும் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டு, 40 கிருமிநாசினி தெளிப்பு கருவிகள், கிருமிநாசினி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 30 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x