Published : 21 Mar 2020 11:27 PM
Last Updated : 21 Mar 2020 11:27 PM

‘கரோனா வைரஸால் உயிர் பலி’ : வதந்தி பரப்பிய 2 பேர் கைது

பூந்தமல்லி பகுதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 பேர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலானது, அதைப்பார்த்த பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. அதில், பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 நபர்களில் 12 நபர்கள் இறந்து விட்டதாகவும். இந்நோய் பூந்தமல்லி பகுதியில் வேகமாக பரவி வருவதாகவும், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறிவருகின்றனர் என இருந்தது.

வாட்ஸப்பில் சில சமூக விரோதிகள் பரப்பிய தகவல் சில தினங்களாக வைரலானது. அந்தத்தகவலை அடுத்து அரசு ஆரம்ப சுகாதார மையத்திலும் பலரும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் பிரபாகரன், உடனடியாக வதந்தி வாட்ஸ் அப் செய்தி குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சைபர் பிரிவு போலீஸாருடன் இணைந்து வதந்திய பரப்பிய நபர்களின் ஐபி அட்ரஸை காணும் முயற்சியில் ஈடுபட்டனர். பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில் வதந்தியை பரப்பி பொதுமக்களிடம் பீதி ஏற்படுத்தியது மாங்காடு வடக்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்த பெஞ்சமின் (33), காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பது தெரியவந்தது.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட பெஞ்சமின் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும், சிவகுமார் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும் சிவகுமார் தான் பணிபுரியும் கார் நிறுவனத்திற்கு விடுமுறை விடவேண்டும் என்பதற்காக போலியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பியதை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x