Published : 21 Mar 2020 03:10 PM
Last Updated : 21 Mar 2020 03:10 PM

மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர் மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என, தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவே சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அவர்களும் ஊரக ஏழை மாணவர்கள் தான். அது தான் முழுமையான சமூக நீதியாக அமையும்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை மேலும் ஊக்குவிக்க அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், கழிப்பறை, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

— Dr S RAMADOSS (@drramadoss) March 21, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x