Published : 21 Mar 2020 08:24 AM
Last Updated : 21 Mar 2020 08:24 AM

எத்தகைய நடவடிக்கையும் எடுப்போம் என்ற நிலையில் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தாமதம் ஏன்?- திமுக கேள்விக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்காதது ஏன் என்ற திமுக உறுப்பினர் தாயகம் கவியின் கேள்விக்கு, கோரிக்கையை வலியுறுத்தி 3-ம் தேதி மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைத்துறை மானிய கோரிக்கையில் திருவிக நகர் தொகுதி திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசியதாவது:

உயர் நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதற்காக 2006-ம்ஆண்டு பேரவையில் தீர்மானம்நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர், உயர் நீதிமன்றத்தில் வழக்காடுமொழியாக தமிழ் வரவேண்டும் என பிரதமரிடமும் முதல்வர்கள்மாநாட்டிலும் தெரிவிக்கப்பட் டுள்ளது. உச்ச நீதிமன்ற அமர்வு கூடும்போது இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கோரிக்கை நிறைவேற அரசு எத்தகைய நடவடிக்கையும் மேற் கொள்ளவும் தவறாது என்றார். ஆனால், ஓராண்டு ஆகியுள்ளது. கொள்கை விளக்கக் குறிப்பில், உச்ச நீதிமன்றம் கோரிக்கையை ஏற்காததால், தமிழக முதல்வர், மத்திய அரசிடம் இந்த கோரிக் கையை மறுபரிசீலனை செய்யக்கேட்டுள்ளார் என்று கூறப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போது தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடமும் தலைமை நீதிபதிகள் மாநாட்டிலும் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து 2012-ல் உச்ச நீதிமன்ற முழு அமர்வு நிரா கரித்தது.

அதன்பின் நடைபெற்ற முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தினார். 2012-ல் நிராகரிக்கப்பட்டபோது திமுகதான் மத்திய அரசில் அங்கம் வகித்தது. நீங்கள் மீண்டும் வலியுறுத்தி கொண்டு வந்திருக்கலாம்.

2016-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, அக்கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தினார். அப்போது மீண்டும் உச்ச நீதிமன்ற முழு அமர்வு முன் வைப்பதாக ஆட்சிமொழித்துறை உறுதியளித்தது. அதன்பிறகும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்தித்தபோது கோரிக்கை அளித்துள்ளார். நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் உச்ச நீதிமன்ற முழு அமர்வில் வைப்பதாக ஆட்சிமொழித்துறை உறுதியளித்தது. இதைத்தான் தெரிவித்தேன். கடந்த மார்ச் 3-ம் தேதி இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x