கூட்டாகச் செயல்படுவோம்; கரோனாவை வெற்றி கொள்வோம்: வைகோ அறிவுறுத்தல்

கூட்டாகச் செயல்படுவோம்; கரோனாவை வெற்றி கொள்வோம்: வைகோ அறிவுறுத்தல்
Updated on
1 min read

நோய் அறிகுறிகள் தென்பட்டால், உரிய சோதனைகளை மேற்கொள்ளுங்கள். எந்தக் காரணம் கொண்டும், பரபரப்போ, பதற்றமோ அடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்பி, மற்றவர்களை அச்சுறுத்த வேண்டாம். கூட்டமாகக் கூடி நிற்பதையும், பயணங்களையும் தவிர்ப்பீர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“உலக வரலாறு காணாத அளவில், கோவிட் 19-கரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவுகின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அனைத்து நாடுகளின் அரசுகளும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள், தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த நூற்றாண்டுகளில் பரவிய கொள்ளை நோய்களைப் போல் அல்லாமல், கரோனா தொற்று நுண்மி, உடனடியாகக் கண்டு அறியப்பட்டு இருப்பதும், உலகம் முழுமையும் உள்ள மருத்துவர்கள், ஆய்வறிஞர்கள், அதற்கான எதிர்ப்பு மருந்தை ஆக்குகின்ற பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு இருப்பதும் ஆறுதல் அளிக்கின்றது.

இந்த நிலையில், அரசுகள் மேற்கொள்கின்ற பாதுகாப்பு முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமானால், கட்டாயம் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. நோய் அறிகுறிகள் தென்பட்டால், உரிய சோதனைகளை மேற்கொள்ளுங்கள். எந்தக் காரணம் கொண்டும், பரபரப்போ, பதற்றமோ அடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்பி, மற்றவர்களை அச்சுறுத்த வேண்டாம். கூட்டமாகக் கூடி நிற்பதையும், பயணங்களையும் தவிர்ப்பீர்.

இன்று ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலை, மனித குலத்திற்கு இயற்கை விடுத்து இருக்கின்ற எச்சரிக்கை என்றே கருத வேண்டும். எனவே, சுற்றுப்புறச் சூழல் தூய்மையைப் பேணுங்கள். உடல் நலப் பாதுகாப்பு குறித்து அரசு விடுக்கின்ற எச்சரிக்கைகளைப் புறந் தள்ளாதீர்கள். கைகளை நன்றாகக் கழுவுங்கள். காய்ச்சல், இருமல் வந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

அடுத்து சில நாட்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும். அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுவோம். இடையூறுகளை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in