

26 கிராமங்களை அழித்து புதிய சுரங்கம் அமைக்கும் திட்டத்தை என்எல்சி நிறுவனம் கைவிட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களுக்கு உட்பட்ட 26 கிராமங்களில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவினை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கீழ் ஏற்கெனவே 3 சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. தற்போது நான்காவது சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. இதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி பகுதிகளில் 4,842 ஹெக்டேர் நிலத்தினைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 26 கிராமங்களைச் சேர்ந்த 8,751 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், நிலக்கரி சுரங்கம் அமைக்க இடம் தர முடியாது என இப்பகுதி மக்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே செயல்படும் சுரங்கங்களுக்காக என்எல்சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் அப்போது முன்வைத்தனர்.
எனவே, இத்திட்டத்தைக் கைவிடக் கோரி மக்களுடன் இணைந்து அமமுகவின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தை சேத்தியாதோப்பில் 06.01.2019 அன்று நடத்தினோம். இந்நிலையில், புதிய சுரங்கம் அமைப்பதற்கான பணிகளை என்எல்சி நிறுவனம் மீண்டும் மேற்கொண்டிருக்கிறது. புதிய சுரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கு என்எல்சி விண்ணப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் என்எல்சி நிர்வாகம் புதிய சுரங்கம் அமைக்க முனைவது கண்டனத்திற்குரியது. 'மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்பதை உணர்ந்து விருத்தாசலம் மற்றும் புவனகிரி பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை என்எல்சி கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால், இப்பகுதி மக்களோடு இணைந்து அமமுகவின் சார்பில் மீண்டும் பெரியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.