Last Updated : 19 Mar, 2020 01:05 PM

 

Published : 19 Mar 2020 01:05 PM
Last Updated : 19 Mar 2020 01:05 PM

மார்ச் 31 வரை டாஸ்மாக் கடைளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை

கரோனா தொற்றைத் தவிர்க்க டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், சுற்றுலா மையங்கள் ஆகியன வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதே காரணத்துக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31.03.2020 வரை தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைளை மூடக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

சிவகாசியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவது அவசியம்.

தமிழகத்தில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அமைந்துள்ளன. பல இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே தற்போது முதல் வருகிற 31.03.2020 வரை தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்," சென்னை உயர் நீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் ஏற்கெனவே இதே கோரிக்கைக்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x