Published : 18 Mar 2020 09:56 PM
Last Updated : 18 Mar 2020 09:56 PM

கோயம்பேடு வணிக வளாகம், காய்கனி அங்காடி திறந்திருக்கும்; வதந்தி பரப்பினால் நடவடிக்கை: சிஎம்டிஏ நிர்வாகம் எச்சரிக்கை 

சென்னை பெருநகரப் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகங்கள் மூடுவதற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சிஎம்டிஏ வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் வருமுன் காக்கும் விதத்தில் துரிதமாக மேற்கொள்ள பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் உத்திரவின்படி அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அனைத்து அங்கன்வாடி மையங்கள், மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச் 31 வரை மூட உத்தவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயம்பேட்டில் அமைந்துள்ள பெருநகரப் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி ஆகியவை பொதுமக்கள் நாள்தோறும் அதிகம் பயன்படுத்தும் மற்றும் கூடும் இடங்களாக உள்ளன.

இருப்பினும் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு போக்குவரத்தும், காய்கனி அங்காடியும் மிகவும் இன்றியமையாதவை. எனவே, இவ்விரு இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடினாலும் தொடர்ந்து இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி சென்னை பெருநகரப் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகங்களில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கடைகள் வழக்கம்போல் இயங்கவும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பேருந்து நிலையத்திற்கும் காய்கனி அங்காடிக்கும் வருகை புரியும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பொதுமக்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

ஆனால், ஒருசில சமூக வலைதளங்களில் இதற்கு மாறாக கோயம்பேடு காய்கனி அங்காடி மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

மேலும் இது போன்ற தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x