Last Updated : 18 Mar, 2020 04:21 PM

 

Published : 18 Mar 2020 04:21 PM
Last Updated : 18 Mar 2020 04:21 PM

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்ம்: நெல்லை, தூத்துக்குடி, குமரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களும் பங்கேற்றிருந்தனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்த்துக்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர் சாதிக் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஷேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ஷம்சுல் லுஹா கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது,

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப் படுவார்கள். என்பதால் இதை ஆதரித்தவர்கள் கூட இதற்கெதிராக குரல் கொடுத்தும், சட்டப் பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர்.

ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதிமுக குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

ராஜஸ்தான்,பஞ்சாப்,டில்லி,மேற்குவங்கம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,கேரளா,ஆந்திர, பாண்டிச்சேரி,பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதுபோல் தமிழக மக்களின் உரிமையை காக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 80 நாட்களை கடந்து தமிழகத்தில் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யூசுப் அலி, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் நவாஸ், பொருளாளர் முகம்மது மைதீன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் நபீல் அஹ்மத், பொருளாளர் நூருல் அமீன் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அசாருதீன், பொருளாளர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x