Published : 18 Mar 2020 04:00 PM
Last Updated : 18 Mar 2020 04:00 PM

நகை பறித்த திருடனை தீரமுடன் விரட்டிச் சென்று பிடித்த இல்லத்தரசி: கூடுதல் ஆணையர் பாராட்டு

பெரம்பூர் அருகே தங்கச் செயினைப் பறித்துச் சென்ற நபரை தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடித்த இல்லத்தரசியை காவல் கூடுதல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் நந்தினி (32). கடந்த 13-ம் தேதி தனது கணவர் தீபக் மற்றும் குழந்தையுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 9 மணி அளவில் பெரம்பூர் சாலையில் செல்லும்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நந்தினியின் கழுத்திலிருந்த 2.5 சவரன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத நந்தினி உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் செயின் பறித்த வழிப்பறி நபரை விரட்டிச் சென்றார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திக் கொண்டு சென்றார். வேகமாகச் சென்ற செயின் பறிப்புக் குற்றவாளி பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் அருகே தடுமாறிக் கீழே விழுந்தார்.

உடனடியாக நந்தினி, ''திருடன் திருடன்'' எனச் சத்தம் போட்டு அந்த நபரைப் பிடித்துக்கொண்டார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து அந்த நபரைப் பிடித்து, செயினை மீட்டு நந்தினியிடம் கொடுத்தனர். பிடிபட்ட நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரைக் கைது செய்த செம்பியம் போலீஸார் விசாரித்ததில் செயினைப் பறித்தவரின் பெயர் சுல்தான் அலாவுதீன் (27) என்றும், அவர் பெரம்பூர், மடுமா நகர், சின்ன குழந்தை இரண்டாவது தெருவில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது.

இதேபோல் குற்றச்செயலில் ஈடுபட்டு பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு இருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு வழக்குகளில் குற்றச் சொத்தான சுமார் 3 சவரன் தங்க நகைகள் முழுவதுமாக பறிமுதல் செய்யப்பட்டது.

வழிப்பறி நபரை தன்னந்தனியாக இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்துக் கொடுத்த தைரியசாலியான இல்லத்தரசி நந்தினியை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டியதோடு வெகுமதியையும் சான்றிதழையும் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x