கோவிட்-19 பாதிப்பை கருத்தில்கொண்டு பயணத்தை ரத்து செய்தால் முழு கட்டணத்தை வழங்க வேண்டும்: ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை

கோவிட்-19 பாதிப்பை கருத்தில்கொண்டு பயணத்தை ரத்து செய்தால் முழு கட்டணத்தை வழங்க வேண்டும்: ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸ் பாதிப்பை கருத்தில்கொண்டு, பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கூட்டமாகச் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, பயணங்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வெளியூர் செல்ல ரயில்களில் ஏராளமானோர் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனர். இதில் சிலரின் பயணம் அத்தியாவசியமானதாக இருக்கலாம், சில தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

பயணச் சீட்டு ரத்து கட்டணம்

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக, அத்தியாவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. இதற்காக பயணச் சீட்டை ரத்து செய்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக, 2-ம் வகுப்பு படுக்கை முன்பதிவு செய்துள்ள பயணச்சீட்டை ரத்து செய்தால் குறைந்தபட்சமாக ரூ.120-ம், 2 மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளுக்கு ரூ.180-ம், 2-ம் வகுப்பு இருக்கை பயணச் சீட்டுகளுக்கு ரூ.60-ம் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும், ரயில் புறப்படுவதற்கு 12 முதல் 48 மணி நேரத்துக்குள் பயணச் சீட்டை ரத்து செய்தால், மொத்தக் கட்டணத்தில் 25 சதவீதமும், 4 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் 50 சதவீதமும் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. 4 மணி நேரத்துக்குள்ளாக ரத்து செய்தால் முழுக் கட்டணமும் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.

இதனால், பணத்தை இழக்க விரும்பாத சிலர், திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி கோவிட்-19 வைரஸ் பாதிப்பு சரியாகும் வரை பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு பிடித்தம் இல்லாமல் முழு கட்டணத்தையும் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in