Published : 17 Mar 2020 06:50 AM
Last Updated : 17 Mar 2020 06:50 AM

நாடு முழுவதும் 1,200 பெண்கள் ஓட்டுநர்களாக தேர்வு; ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி செய்யப்படுமா?- ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தகவல்

ரயில்வேயில் இன்ஜின் ஓட்டுநர்களாக முதல்முறையாக 1,200-க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 12,617 பயணிகள் ரயில், 7,421 சரக்கு ரயில், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ. ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என பிரம்மாண்டமானபொதுத்துறை நிறுவனமாக விளங்குகிறது இந்திய ரயில்வே.

காலத்துக்கு ஏற்ப, ரயில்கள், ரயில் நிலையங்களில் தொடர்ந்து பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ரயில் இன்ஜின்களில் இன்னும் கழிப்பிட வசதிஇல்லாதது ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் குறையாக உள்ளது.

இதற்கிடையே, ஓட்டுநர் பணிஇடங்களுக்கு முதல்முறையாக 1,280 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 216 பேர், கேரளாவில் 145, ஆந்திராவில் 131, பிஹாரில் 122, மகாராஷ்ராவில் 117, மேற்கு வங்கத்தில் 110 பேர் என அதிக அளவில் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 43 பெண்கள் தேர்வாகிஉள்ளனர். தேர்வான பெண்களுக்கு சில கோட்டங்களில் பயிற்சியும் தொடங்கிவிட்டது.

ஓட்டுநர் பணியில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ரயில் இன்ஜின்களில் இனியாவது கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறையினர் கூறியதாவது:

அகில இந்திய லோகோ ஓட்டும்தொழிலாளர் கழகத்தின் தென்மண்டல தலைவர் வி.பாலசந்திரன், இணை பொதுச் செயலாளர் கே.பார்த்தசாரதி: இந்திய ரயில்வேயில் நாளுக்குள் நாள் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால், ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி என்பதுகனவாகவே உள்ளது. இதனால்,நாங்கள் கடுமையாக அவதிப்படுகிறோம்.

ரயில்வேயில் பயணிகளுக்கானபுதிய வசதிகள், தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, ஊழியர்களுக்கான வசதிகளையும் முழுமையாக செய்து தருவது நிர்வாகத்தின் கடமை. தவிர, சமீபகாலமாக பெண்ஓட்டுநர்கள் அதிக அளவில் பணிக்குவருகின்றனர். புதிதாக 1,200-க்கும் மேற்பட்டோர் தேர்வாகி விரைவில் பணியில் சேர உள்ளனர்.

எனவே, விமானத்தில் இருப்பதுபோல, பயோ கழிப்பிட வசதியை ரயில் இன்ஜின்களில் ஏற்படுத்தி தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஆர்இயு மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்: ரயில் பைலட் பணி என்பது இரவு பகல் பாராமல் பணியாற்றும் கடினமான தொழில்நுட்ப பணி. சமீபகாலமாக ரயில்வே பணியில்பெண்கள் சேர்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஓட்டுநர் போன்ற கடினமான பணிக்கும் பெண்கள் துணிச்சலாக வருகின்றனர்.

அதிகரித்துவரும் பெண் லோகோபைலட்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்திய தொழில்நுட்பக் கழகம், ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்புமற்றும் தர அமைப்பு நிறுவனங்களின் துணையுடன் இன்ஜின்களில் கழிப்பிட வசதியை உடனடியாக உருவாக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு அறை வசதிகளை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வடக்கு மண்டல ரயில்வேயில் ஒரு ரயில் இன்ஜினில் ஓட்டுநர்களுக்கு பிரத்யேகமாக கழிப்பிட வசதி அமைக்கப்பட்டு சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற விரைவு ரயில் இன்ஜின்களில் ஓட்டுநர்களுக்காக கழிப்பிட வசதி அமைப்பது குறித்தும், இன்ஜினில் எந்த பகுதியில் அமைப்பது என்பது குறித்தும் ரயில்வே துறை ஆய்வு செய்து வருகிறது. இனிமேல், கழிப்பிட வசதியுடனேயே இன்ஜின்கள் தயாராகும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x