Published : 16 Mar 2020 03:54 PM
Last Updated : 16 Mar 2020 03:54 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்: கீழக்கரை வங்கிகளில் குவிந்த முஸ்லிம் மக்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திங்கட்கிழமை கீழக்கரையில் உள்ள வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த மார்ச் 03 அன்று தொடங்கி தொடர் தர்ணாப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை 14-வது நாள் தொடர் போராட்டத்தை முன்னிட்டு கீழக்கரைகளில் உள்ள வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு கீழக்கரையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் குடியுரிமை சட்டத்த்திற்கு எதிராகவும் வங்கி முன்பு போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டனப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

புதுமடம் இளைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அனீஸ் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மக்கள் அரசு கட்சியின் தலைவர் அருள்மொழிவர்மன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x