Published : 16 Mar 2020 01:04 PM
Last Updated : 16 Mar 2020 01:04 PM

திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகல்; பொதுச் செயலாளராகப் போட்டியிடும் துரைமுருகன்: ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் வரும் 29-ம் தேதி தேர்வு நடைபெறும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அப்பொறுப்பு காலியாக உள்ளது. இதனால், புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழு வரும் 29-ம் தேதி கூடும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அதனால், வரும் 29-ம் தேதி பொருளாளர் பதவிக்கும் தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிவிப்பில், "கடந்த 15-ம் தேதி அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வரும் 29-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 16-ம் தேதி வெளியிட்ட கடிதத்தின் வாயிலாக, திமுக பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.

எனவே, வரும் 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x