

தமிழகத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், குடியுரிமை சட்டத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் 17-வது மாநில ஆண்டு விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பேரிடர் காலங்களின்போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் போலவே கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையை சுகாதார அமைச்சரும், செயலரும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு நியமித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை (இன்று) ஆலோசனை செய்ய உள்ளார்.
குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) குறித்த அச்சத்தின் காரணமாக சிறுபான்மையினர் வைத்துள்ள கோரிக்கைகளில் தவறு ஏதும் இல்லை. சிறுபான்மையினருக்குப் பாது காப்புக் கவசமாக அதிமுக அரசு என்றும் இருக்கும்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் ஒரு முடிவு எடுக்கப்படும். அதனால்தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை.
தமிழகத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், குடியுரிமைச் சட்டத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை முதல்வர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதற்காக யாரும் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.