Published : 16 Mar 2020 08:03 AM
Last Updated : 16 Mar 2020 08:03 AM

‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய வழிமுறைகள்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேமாகாணம், வூஹான் நகரில் முதன்முதலில் மக்களை பாதிக்கத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களைப் பாதித்துள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலகசுகாதார மையம் உள்ளிட்ட சர்வதேச நிறு வனங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன.

கோவிட்-19 வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட சில வழிகாட்டுதல்கள்:

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அது ஒரு நபரிடம் இருந்துமற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பரவக்கூடும்.

மூக்கு, தொண்டை, சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் தொற்று இது.

இந்த காய்ச்சல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் ஆரோக்கியம் குன்றியவர்களையே தீவிரமாகப் பாதிக்கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மிதமான தாக்கத்தையே ஏற்படுத்தக் கூடியது.

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். 80 சதவீதத்தினருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும். உரிய மருத்துவ சிகிச்சை மூலம் இரண்டு வாரங்களில் நீங்கள் குணமடைந்து விடலாம்.

கோவிட் -19 காய்ச்சல் உள்ளவர் தும்மி னாலோ, இருமினாலோ பரவும் நீர்த்துளி மற்றொருவரின் கண், நாசி, வாய் பகுதியில் பட்டால் காய்ச்சல் தொற்றும்.

காய்ச்சல் உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடும்போது பரவும்.

உணவு வழியாக இந்த வைரஸ் பரவாது.

கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவதால் பரவாது.

சாதாரண வைரஸ் காய்ச்சலையும் கோவிட் - 19 காய்ச்சலையும் இடையில் வேறுபடுத்துவது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. காய்ச்சல், இருமல்,மூச்சுத்திணறல் ஆகியவை இருந்தாலோ, சீனா, ஈரான், இத்தாலி, கொரியா உள்ளிட்ட கோவிட் - 19 வைரஸ் பரவி இருக்கும் நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் சென்றிருந்தாலோ, கோவிட்-19 காய்ச்சல் உள்ளவர்களுடன் இருந்தாலோ, கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவமனைக்கோ அல்லது மையத்துக்கோ சென்றிருந்தாலோ உங்களுக்கு வந்திருப்பது கோவிட்-19 பாதிப்பாக இருக்கலாம்.

மிதமாக தாக்கும்பட்சத்தில் 2 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை கோவிட்-19 வைரஸ் தாக்கம் நீடிக்கும். ஒருவேளை காய்ச்சல், சளி, தொண்டைக்கட்டு இருக்குமானால் பதற்றமடைய வேண்டாம். நாளொன்றுக்கு 2-3 முறை ஆவிபிடியுங்கள், சுத்தமான நீரை அடிக்கடி பருகுங்கள், அவ்வப்போது கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள், காய்ச்சல் தீவிரமடைவதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி முறையாக மருந்தை உட்கொள்ளுங்கள்.

ஒருவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதா லேயே அவருக்கு கோவிட்-19 வைரஸ் தாக்கிவிட்டதாக முடிவுசெய்துவிடுவது தவறு. காய்ச்சல் வந்தவர்க்கெல்லாம் கோவிட்-19 வைரஸ் சோதனை அவசியமில்லை. அதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

வைரஸ் பாதித்தாலும் அதிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். சிறப்பு சிகிச்சை ஏதுமின்றி இதிலிருந்து 80 சதவீதத்தினர் குணமடைந்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.

கோவிட்-19 வைரஸ் வராமல் தடுக்கும் நோய் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் பூரணமாகக் குணமடைந்து இருக்கிறார்கள்.

பூண்டு சாப்பிடுவதால் கோவிட்-19 வைரஸை தடுக்க முடியும் என்பது பொய்.

வெயில் காலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாது என்பதற்கு அறிவியல் நிரூபணம் ஏதுமில்லை. இருப்பினும் வெப்பம் அதிகரித்தால் கோவிட்-19 வைரஸ் பரவும் வேகம் குறையலாம் என்று கூறப்படுகிறது.

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரின் சளி, எச்சில் ஆகியன காகிதம், மரம், அட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு ஆகிய பொருட்களின் மீது படிந்தால் 8-10 மணி நேரம் வரை கோவிட்-19 வைரஸ் வீரியம் குறையாமல் உயிருடன் இருக்கும். அப்பொருட்களைத் தொடுபவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

மூன்று அடுக்கு கொண்ட முகக் கவசத்தை கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உடையவர்கள் அணிவது நல்லது.

மூன்று இலக்குகள்

உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

சோப்பு போட்டு நீரில் கைகளை நன்றாகக் கழுவுதல்.

சோப்பு, தண்ணீர் கிடைக்காதபோது சானிடைஸர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுதல்.

அழுக்கான கைகளால் கண், வாய், மூக்கு ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் .

இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தொலைவில் தள்ளி இருப்பது நல்லது.

கை குலுக்குவதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்லுதல்.

உங்களுக்குப் பிரியமானவர்களை பாதுகாப்பது எப்படி?

இருமல், தும்மல் வரும் போது கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்துதல்.

கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதையும் வெளியூர் பயணங்களையும் தவிர்த்தல்.

நோய் தொற்று இருக்குமானால் கட்டாயம் முகக் கவசம் அணிதல்.

உங்களுடைய சமூகத்தை பாதுகாப்பது எப்படி?

காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுதல்.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்குமானால் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுதல்.

நமக்கு வரும் ‘பார்வர்ட் மெசேஜ்’-களையெல்லாம் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு பகிராமல் இருப்பது.

கூடுதல் விவரங்கள், ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் எண் : +91-11-2397 8046 மற்றும் ncov2019@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x