Published : 15 Mar 2020 09:15 AM
Last Updated : 15 Mar 2020 09:15 AM

தொற்றுநோய் பட்டியலில் கோவிட்-19 வைரஸ் சேர்ப்பு- தமிழக அரசு அரசிதழில் வெளியீடு

கோவிட்-19 வைரஸை தொற்றுநோய் பட்டியலில் சேர்த்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் ‘பெருந்தொற்று நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடராக இந்தியாவும் நேற்று அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பொது சுகாதார சட்டத்தின் 1939-கீழ் தொற்றுநோய் பட்டியலில் சேர்த்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோவிட்-19 வைரஸை தொற்றுநோய் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்பது மருத்துவர்கள், ஆய்வகங்களை சேர்ந்தவர்கள் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தாலோ அல்லது பரிசோதனை செய்தாலோ உடனடியாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதாகும்” என்றார்.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகிறது. நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தும்மல், சளி பிரச்சினைகள் இருந்தால் அவர்களை உடனடியாக அரசுமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர், சென்னைராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதற்போது குணமடைந்துள்ளார். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் வைரஸ் அறிகுறிகளுடன் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x